மதுரையில் பரபரப்பு..! விஜயை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த Y பிரிவு காவலர்!

தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்திற்கு மத்தியில் படப்பிடிப்புகளிலும் பங்கேற்று வருகிறார். இதற்காக கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் தங்கி இருந்தார். முன்னதாக சென்னையில் இருந்து அவர் மதுரைக்கு புறப்படுவதற்கு முன்பு முதல் முறை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து கொடைக்கானலுக்கு செல்ல இருப்பதாகவும், தொண்டர்கள் யாரும் விமான நிலையத்திற்கோ, தனக்கு பின்னாலோ வரவேண்டாம் என விஜய் கூறினார்.
எனினும் மதுரை வந்த விஜயை, அவரது தொண்டர்கள் பின்தொடர்ந்து ஆபத்தான முறையில் சென்றனா். மேலும் அவரது பேச்சை கேட்காமல் அளவுகடந்த கூட்டம் கூடியது. இதனால் மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தான் படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சென்னைக்கு புறப்பட இருந்தார்.
அப்போது அங்கிருந்த தவெக தொண்டர் ஒருவர், விஜயிடம் சால்வை வழங்க முயன்றார். அப்போது விஜய் பாதுகாப்புக்கு இருந்த காவலார் ஒருவர், சால்வை அணிய வந்த தவெக தொண்டர் தலையில் துப்பாக்கியை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் தவெக தலைவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவர் இன்பராஜ் என்பதும், மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற தலைவர் என்பது தெரிந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.