திமுக ஆட்சிக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் - செங்கோட்டையன்..!

பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், அதிமுக-வின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் 58 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் கோவிட் தொற்று காலத்தில் கூட ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பாத திமுக ஆட்சியில் கல்விப்பணி எப்படிச் சிறக்கும் எனக் கேள்வி எழுப்பிய செங்கோட்டையன், தற்காலிக ஆசிரியர்களை மட்டுமே திமுக அரசு நியமனம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்திருப்பதாக நிதியமைச்சர் கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், என்ன செய்தாலும் திமுக அரசால் அதனைச் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஆசிரியர்களுக்கான நிதியையும், ஈட்டிய விடுப்பையும் வழங்காமல் தந்திரத்தோடு செயல்படும் திமுக ஆட்சிக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.