செம அப்டேட் : விரைவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்..!

மே 1-ம் தேதி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் 400 தூய்மை மற்றும் மலேரியா பணியாளர்களுக்கு ஒளிரும் பட்டையுடன் கூடிய 2 சீருடைகள், தொப்பி, கைத்துண்டு, குளியல் துண்டு, டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் மற்றும் ஒரு பை ஆகியவை அடங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதற்காக மொத்தம் ரூ.7.41 லட்சம் செலவிடப்பட்டது. மேயர் பிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், "சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் இரவிலும் வேலை செய்கிறார்கள். அவர்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்க ஒளிரும் பட்டைகளுடன் கூடிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறினார். அதாவது, இரவில் வேலை செய்பவர்கள் விபத்தில் சிக்காமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் அறிவுறுத்தல்படி, தாட்கோ திட்டம் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு பிரத்யேக அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பணியின்போது விபத்தில் உயிரிழந்தால் வழங்கப்படும் நிதியுதவி ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால் ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்த உதவி மாநகராட்சி மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும் கிடைக்கும். இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதிவு செய்யாத தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இன்று மாநகராட்சியின் 5 மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் மாநகராட்சி முழுவதும் உள்ள 11 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று மேயர் பிரியா உறுதியளித்தார். கொடுங்கையூரில் பயோ மைனிங் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் குப்பையிலிருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும்.
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பற்றி ஹைதராபாத்தில் ஆய்வு செய்தோம். அந்த திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்கிறார்கள். அது தொடர்பான 3 மாத மாசு கண்காணிப்பு அறிக்கையை கேட்டுள்ளோம். மாசு இல்லை என்றால், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.