ஒரு கிலோ ரூ.160 முதல் 180 வரை விற்பனை.. பொதுமக்கள் அதிர்ச்சி.!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு இன்று ரூ.20 உயர்ந்து உள்ளது. இது பொதுமக்கள் இடையே பெரிதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1,100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில், இன்று எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 700 டன் வரத்து குறைந்து 400 டன் அளவிற்கு மட்டுமே தக்காளி வந்தது. இதனால் இன்று மொத்த விற்பனையில் 1 கிலோ தக்காளி 130-க்கும் , சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி 150-க்கும், சென்னை புறநகரில் 160 முதல் 180 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விளைச்சல் அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாடு காரணமாக வட மாநிலங்களில் கிலோ 230 முதல் 260 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. போதிய விளைச்சல் இல்லாதது மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு போன்றவற்றால், தக்காளி விலை உயர்வு காணப்படுகிறது. ஆந்திர பிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் தக்காளி உற்பத்தி குறைந்து உள்ளதும் இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.
இஞ்சி நேற்று கிலோ ரூ.260-க்கு விற்ற நிலையில், இன்று ரூ.220-க்கு விலை குறைந்து உள்ளது. சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து ரூ.200-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், பூண்டு விலை ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.