1. Home
  2. தமிழ்நாடு

வரும் வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - சீமான்..!

1

சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்திக்கு விடுமுறை அளிப்பது போல் புனித வெள்ளிக்கும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது என்று கூறினர்.


மேலும் அவர், “தமிழகத்தில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழக அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மை சமயத்தினராக தமிழகத்தில் வாழ்கின்ற கிறித்துவப் பெருமக்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.


மகாவீரர் ஜெயந்திக்காக மக்களின் உணவு உரிமையான இறைச்சிக் கடைகளை மூடும் தி.மு.க., அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? அரசின் வருமானம் ஒருநாள் தடைபடுவதை தவிர, மதுக்கடைகளை மூடுவதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது?


எல்லோருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டிய தமிழக அரசு, குறிப்பிட்ட மக்களின் சமய உணர்வுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட சமய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுவது சிறிதும் அறமற்றச் செயலாகும். இதுதான் தி.மு.க., அரசு கடைபிடிக்கும் 'திராவிட மாடல்' மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, தி.மு.க., அரசு கிறித்துவப் பெருமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்று தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென்றும், அதனை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டசபைக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்” என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like