அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு தடை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் ஆகியோர் இடையே அண்மை காலமாக கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இருவரும் பரஸ்பரம் மாறி மாறி தங்களுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனக்கு எதிராக பொது வெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளை தெரிவிப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் தனக்கு எதிரான அவதூறான, ஆதாரமில்லாத கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி, ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில், இரண்டு கோடியே பத்து லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி, வழக்கு எண்ணிடும் நிலையில் உள்ளதால், பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்றும், மதுரை அமர்வில் ஏற்கனவே அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சீமான் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவிற்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைத்தார்.
முன்னதாக, அருண்குமார் ஐபிஎஸ் போலீஸ் உடையை கழட்டி வைத்துவிட்டு தன்னுடன் மோத வேண்டும் எனவும், போஸீஸ் உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் தன்னிடம் எப்போதும் பலிக்காது என்றும் சீமான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.