1. Home
  2. தமிழ்நாடு

கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்..!

1

 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பள்ளிகளை ஜூன் 6-ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது அனைவரும் அறிந்ததே. வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.

கோடை மழையின் பெய்த நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. தலைநகர் சென்னையில் 108 டிகிரி வரை வெப்பம் வரை பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில் தமிழக அரசு பள்ளிகளை திறப்பது சரியான முடிவாக தெரியவில்லை.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் வரும் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெயிலின் தாக்கத்தால் மாணவர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 21-ஆம் தேதி தான் திறக்கப்படுகிறது.

அவ்வாறு இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறப்பது இந்த விதத்திலும் நியாயமற்றது. எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளிகள் திறப்பை தீர்மானிக்க வேண்டும். கடந்த 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கடுமையான வெப்ப அலை வீசியதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.

அதையேற்று அரசு பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 7-ஆம் தேதிக்கும், பின்னர் ஜூன் 14-ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கடுமையான வெப்பம் வாட்டும் நிலையில் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பது நியாயம் இல்லை. கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும், குழந்தைகளும். முதியோர்களும், தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் பெற்றோரும் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, வெயிலின் தாக்கத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like