தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. முதல் நாளில் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பென்சில், சீருடை உள்ளிட்டவற்றை விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து புதிய கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது. அதில் மொத்த வேலை நாட்கள் 220 என்று கூறப்பட்டிருந்தது. வழக்கமாக 210 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கப்படும். ஆனால் இம்முறை கூடுதல் 10 நாட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் வண்ணம் அட்டவணை தயாரிக்கப்பட்டது.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அதனை ஈடுசெய்யும் வகையில் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் செயல்பட்டன. அதற்கடுத்த வாரம் ஜூலை 6 அன்று விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் ( ஜூலை 13 ) சனிக்கிழமை வருகிறது. இது பள்ளிக் கல்வித்துறை நாட்காட்டியின் படி வேலை நாளாகும்.
இன்று பள்ளிக்கு வந்திருந்த அனைத்து மாணவ, மாணவிகளிடமும் வீட்டுப் பாடம், நாளைய தினம் மேற்கொள்ள வேண்டிய பாட வாரியான செயல் திட்டங்கள் ஆகியவை அறிவுறுத்தப்பட்டிருந்தன. இந்த சூழலில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறையிடம் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.
இதனை பரிசீலனை செய்த பள்ளிக் கல்வித்துறை இன்று (ஜூலை 13) பள்ளிகள் இயங்காது என்று அறிவித்துள்ளது. இதனை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த உத்தரவின் படி அடுத்து வரும் மாதங்களிலும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.png)