1. Home
  2. தமிழ்நாடு

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

1

திருச்சியில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஸ்ரீரங்கநாதனின் சகோதரியாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் சீர்வரிசை அனுப்பி வைப்பார். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இதையொட்டி, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச் சிறப்பாகும். இந்த விரதம் பூரணமடைந்தவுடன், சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரைப் பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிவதாக ஐதீகம்.

Samayapuram

அந்தவகையில், நிகழாண்டுக்கான சித்திரைத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவ அம்மன், கிராம்பு, ஏலக்காய் மாலையுடன் சிறப்பு கேடயத்தில் புறப்பாடாகி, தங்கக் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மேல் சமயபுரம் மாரியம்மன் தேரில் எழுந்தருளுகிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். வரும் 19-ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Local-holiday

இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வரும் 16-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில், “சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழா வரும் 16ஆம் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

திருச்சியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும் என்றும், ஆயினும் தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like