1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவியின் உயிரை பறித்த ஷவர்மா..! தாய் உள்ளிட்ட மூவர் மருத்துவமனையில் அனுமதி..!

1

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் தவக்குமார். இவருக்கு சுஜாதா (38) என்ற மனைவி மற்றும் மகள் கலையரசி (14) மகன் பூபதி (12) ஆகியோர் உள்ளனர். கடந்த 16ஆம் தேதி இரவு சுஜாதா தனது மகள், மகன் மற்றும் அண்ணன் சினோஜ் (56), அண்ணி கவிதா (50) ஆகியோருடன் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு சவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

ஹோட்டலில் வாங்கிவந்த உணவுகளை வீட்டில் சாப்பிட்டபின் சிறிது நேரத்தில் கலையரசி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கள்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியுடன் உணவு சாப்பிட்ட தாய் அவரது மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவி கலையரசி நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

அதே நாள் இரவு இந்த ஹோட்டலில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று (செப். 16) பிறந்த நாளாகும். இதனையொட்டி அவர் தனது நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் சனிக்கிழமையன்று மாலை சென்ற நிலையில், அங்கு சவர்மா உள்ளிட்ட அசைவ உணவுகளை சாப்பிட்டு உள்ளனர்.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை திடீரென 13 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரி விடுதி ஊழியர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா, மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் பரமத்தி சாலையில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார். மாணவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என உணவக உரிமையாளர் நவீன்குமாரிடம் கேட்டறிந்தார். 

மேலும் கிச்சன் அறையை பார்வையிட்ட அவர் சிக்கன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும், உணவகத்தை சீல் வைக்கவும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அங்கிருந்த சிக்கன்களை பினாயில் கொண்டு அழித்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Trending News

Latest News

You May Like