1. Home
  2. தமிழ்நாடு

உருக்கமான கடிதம் எழுதி பள்ளி மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை!

1

டெல்லியில் படித்து வந்த 16 வயது மாணவர், ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரவலான சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு பள்ளிக்குச் சென்ற மாணவர், அதே காலை 2-வது பிளாட்ஃபார்மில் இருந்து குதித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதியம் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து தகவல் வழங்கியதும் பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மரணத்திற்கு முன், தனது புத்தகப்பையில் மாணவர் ஒரு தற்கொலைக் கடிதம் எழுதி வைத்திருந்தார். “சாரி மம்மி… நான் பலமுறை உங்கள் இதயத்தை உடைத்துவிட்டேன்; இறுதியாக இதை செய்வதற்கு என்னை மன்னிக்கவும். என்னைப்போல் வேறு எந்த மாணவனும் இப்படிச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே என் கடைசி ஆசை. என் உடல் பாகங்கள் ஏதாவது பயனுள்ளதாக இருந்தால், அவற்றைத் தேவையுடையோருக்கு தானம் செய்யுங்கள்” என்று அவர் எழுதியிருந்தது.

டெல்லி மெட்ரோ ரயில்

இந்த மாணவர் மீது பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களும், முதல்வரும் நீண்டகாலமாக உளவியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. நாடகப் பயிற்சியின்போது “ஓவரா நடிக்கிற” என்று இழிவுபடுத்தியதாகவும், அப்போது முதல்வர் இருந்தும் தடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்வுகள் நெருங்கி வருவதால், எழுதிவிட்டுப் பிறகு வேறு பள்ளியில் மாற்றிவிடுவோம் என்று பெற்றோர் சமாதானப்படுத்தியிருந்தும், அண்மையில் ஒரு ஆசிரியர் “பள்ளியிலிருந்து வெளியேற்றிவிடுவேன், இடமாற்றுச் சான்றிதழ் கொடுத்து விடுவேன்” என்று மிரட்டியதால் மாணவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக சொல்லப்படுகின்றது.பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் மாணவனின் தந்தை புகார் அளித்ததையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like