பிரதமர் மோடியுடன் சவுதி அரேபிய இளவரசர் சந்திப்பு..!

டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் (செப்டம்பர் 9 மற்றும் 10) ஜி-20 உச்சி மாநாடு நடந்தது. இதில் 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில், ஜி-20 உறுப்பு நாடுகளில் ஆப்பிரிக்க யூனியன் இணைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான, கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற ஒரு பெரிய வரலாற்று ஒப்பந்தம் பற்றி இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்தன.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டணி திட்டம் தொடங்கப்பட்டது. மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் உள்ளிட்டோர் பேசினர். இந்த நிலையில், ராஷ்டிரபதி பவனில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமரான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் கலந்து கொண்டார். அவர், ஜனாதிபதி திரவுபதி திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மற்றும் பிற மந்திரிகளை நேற்று சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இளவரசர் முகம்மது பின் சல்மானும் நானும் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தினோம். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மதிப்பாய்வு செய்தோம். வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக தொடர்புகள் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
கிரிட் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, செமிகண்டக்டர்கள், விநியோகச் சங்கிலி ஆகியவற்றில் இருநாடுகளுக்கும் இடையே மகத்தான ஒத்துழைப்புக்கு வாய்ப்புள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்ப பல்வேறு முயற்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
முன்னதாக, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி இளவரசருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளவரசர், "இந்தியாவில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்தியாவுக்கு எனது வாழ்த்துகள். உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் உலகிற்கு நன்மை பயக்கும். இரு நாடுகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம்" என்று கூறினார்.