அடுத்த ஒருவாரத்தில் சசிகலா விடுதலை ? - வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி !

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ஹகார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இவர் எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வருவதே இதற்கு காரணம்.
சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என ஒருதரப்பினர் கூறிவருகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை, அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலா உடல்நலம் குறித்து அண்மையல் வதந்தி பரவியது. இதனால் அவர் தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு அவர் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். அதில் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில் சசிகலா ஒருவாரத்தில் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது. காரணம் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும்.
எனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும் எனக் கூறினார்.
ஆனால், அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சசிகலா விடுதலை தொடர்பாக ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு, ஜனவரியில் சசிகலா விடுதலை ஆவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in