1. Home
  2. தமிழ்நாடு

தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம்..!

1

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. டி20 தொடர் வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வுக் குழுவில் சனத் ஜெயசூர்யா ஏற்கனவே கடந்த காலத்தில் இருந்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணியின் பேட்டிங் ஆலோசகராக சனத் ஜெயசூர்யா செயல்பட்டார்.

சனத் ஜெயசூர்யா இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,973 ரன்கள் குவித்துள்ளார். 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13,430 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 28 சதங்கள் மற்றும் 68 அரைசதங்கள் அடங்கும். கடந்த 1996 ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் அங்கம் வகித்துள்ளார். இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிறிஸ் சில்வர்வுட் அண்மையில் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like