மும்பை காவல் நிலையத்தில் நடிகர் சல்மான் கான் புகார்..!

கடந்த செவ்வாய் (ஜூன் 11) அன்று நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு இரவில் தாமதமாக சென்றுள்ளார். நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வீட்டின் பால்கனியில் துப்பாக்கியால் சுட்டதாகவும், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்ததாகவும் நடிகர் சல்மான் கான் காவல்துறையினரிடம் புகாரளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக சல்மான் கான் மற்றும் அவரது சகோதரர் அர்பாஸ் கானிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிசூடு நடந்த போது அவரது சகோதரர் வீட்டில் இல்லை என்றபோதும் அவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். சல்மான் கானிடம் 4 மணி நேரமும், அவரது சகோதரரிடம் 2 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆட்கள் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதற்கு முன், மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டுக்கு வெளியே கடந்த ஏப்.14-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை, பிகாரைச் சேர்ந்த விக்கி குப்தா, சாகர் பால் ஆகியோரை கைது செய்தது.கைது செய்யப்பட்ட இருவருக்கும் இரு நாட்டு துப்பாக்கிகளை வழங்கியதாக சோனு பிஷ்னோய், அனுஜ் தாபன் ஆகிய இருவர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டனர். தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூறியதன்பேரில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதில், அஜய் தாபன் கடந்த மே.1 அன்று போலீஸ் காவலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக லாரன்ஸ் பிஷ்னோய், அன்மோல் பிஷ்னோய் உள்பட 17 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் மாநிலம் சபர்மதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தம்பி அன்மோல் பிஷ்னோய் அமெரிக்கா அல்லது கனடாவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஜூன் 1 அன்று, சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 4 பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.