ஜனவரி 22 ஆம் தேதி இறைச்சி, மீன், மது விற்பனைக்கு தடை!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/08af0df29c30443cd1b310c392cf728f.jpg?width=836&height=470&resizemode=4)
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் நடக்கிறது. இதில் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், விஐபிக்கள் என ஏராளமானோர் அழைக்கப்பட்டுள்ளனர். 4ஆயிரம் சாதுக்களும் விழாவில் பங்கேற்கிறார்கள்.
நாடுமுழுவதும் உள்ள இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் ராமர் கோயில் திறப்பு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். வரும் 22ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில், ராமர் கோயிலில் ராமர் சிலை பிற்பகல் 12.30 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கிவிட்டன. ராமர் கோயலில் ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கடந்த ஒரு வாரமாக தினசரி சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
வாரணாசியில் இருந்து லட்சுமி காந்த் தீட்சிதர் மூலம் நண்பகல் 12.20 மணிக்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் பூஜை தொடங்கி ஒரு மணிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் “ ராமர் கோயில் திறப்பு விழா நடக்கும் ஜனவரி 22ம் தேதி அன்று உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் இறைச்சி, மாமிசம், மீன் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படுகிறது. அதேபோல மதுவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.