சோகம்..! சிறுமுகை வனப்பகுதியில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை மரணம்!

சிறுமுகை அருகே வரக்கூடிய வன எல்லை பகுதியில் கடந்த செவ்வாய் (22.4.24) அன்று உடல் மெலிந்த நிலையில், உடல்நல குறைவுடன் ஒரு ஆண் யானை நின்றுகொண்டிருப்பது குறித்து தெரிந்துகொண்ட வனத்துறையினர், அதற்கு ஆன்டி பயாடிக், வலி நிவாரணி மருந்துகள் கலந்த பழங்களை உணவாக வழங்கி சிகிச்சை கொடுத்தனர். யானை வனத்தில் உள்ள குட்டையில் நீர் குடித்து வந்தது. மேலும் நிபுணர்கள் அறிவுறுத்தலின் படி அதற்கு உணவு வழங்கப்பட்டது.
இந்த யானை 22.4.24ம் தேதிக்கு முன்னதாகவே சிறுமுகை வனப்பகுதியில் உடல் நல குறைவுடன் சுற்றி வந்துள்ளது. முதலில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், யானையை பார்த்து அதன் நிலை இப்படி இருப்பதால் அதற்கு உணவு, தண்ணீர் கொடுத்து உள்ளனர்.
விஷயம் வனத்துறைக்கு தெரியப்படுத்திய பின்னர் அவர்கள் யானைக்கு சிகிச்சை வழங்கியிருக்கின்றனர். யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கவனித்தும் வந்துள்ளனர். இப்படியிருக்க ஒரு வாரமாக யானையை பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் கொடுக்காமல் யானை உயிரிழந்தது.