சோகம்..! விஷவாயு தாக்கி சிறுமி உட்பட 3 பெண்கள் பலி!
விஷவாயு தாக்கியதில் 3 பெண்கள் பலியாகிய செய்தி புதுச்சேரி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி செந்தாமரை, கழிவறைக்கு சென்ற நிலையில், விஷவாயுத் தாக்கி மயக்கமுற்றுள்ளார். நீண்ட நேரமானதால் அவரை காப்பற்ற சென்ற அவரது மகள் காமாட்சியும் விஷவாயுத் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.இருவரையும் மீட்க சென்ற காமாட்சியின் மகள் 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியும் மயக்கடைந்துள்ளார்.
இந்நிலையில், தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அப்போது பரிசோதனை மருத்துவர்கள் செந்தாமரை, காமாட்சி ஆகியோர் முன்னதாகவே பலியானதாக தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பாக்கிய லட்சுமியும் பலியானார். புதுச்சேரியில் விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஷவாயு தாக்கியதை தொடர்ந்து, காவல்துறை அப்பகுதி பொதுமக்களை வீட்டை விட்டு வெளியேற்றி வருகின்றனர். தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள் புதுநகர் பகுதியில் ஆய்வு நடத்தி, பாதாள சாக்கடையை திறந்து விஷவாயுவை வெளியேற்றி வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.