வடகொரியா செல்லும் ரஷ்ய அதிபர் புடின்..!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 844 நாட்களை கடந்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு வட கொரியா ஆதரவாக இருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். ரஷ்யா மற்றும் வட கொரியா இடையிலான உறவை மேம்படுத்தி வருகிறோம் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
அதிபர் புடினின் வட கொரிய பயணத்தின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இரண்டாம் உலக போரை தொடர்ந்து வட கொரியா உருவானதில் இருந்தே ரஷ்யா மற்றும் வட கொரியா இடையே நட்புறவு இருந்து வருகிறது.
எனினும், கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் துவங்கியதில் இருந்து ரஷ்யா மற்றும் வடகொரியா இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு மேம்பட்டு இருக்கிறது. இதனிடையே உக்ரைன் மீதான போருக்கு உதவும் வகையில், வட கொரியா சார்பில் 7000 கண்டெயினர்களில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டன. இதில் வெடி குண்டுகள், அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
உக்ரைன் உடனான போர் தீவிரம் அடைந்ததில் இருந்து, புடின் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர் நண்பர்களை தேடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.