பெண்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன் வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை..!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடைந்திட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், முதன்முறையாக 1989ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிக் குழு இயக்கம் என்ற இயக்கம் தொடங்க வித்திட்டார். அவருடைய வழியில் ஆட்சி புரிந்து வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலரான திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சரின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு சாதனைகளைப் படைத்த வருகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றின் தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-22ஆம் நிதியாண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.52 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, 2022-23ஆம் நிதியாண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 25,642.01 கோடியும், 2023-24 நிதியாண்டில் 4,79,350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,074.76 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2024-25ஆம் நிதியாண்டில் ரூ. 35,000 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 4,84,659 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35,189.87 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டிற்கான நிலையறிக்கையில் சுய உதவிக் குழு மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, 07.05.2025 வரை 7,917 சுய உதவிக் குழுக்களுக்கு 698.87 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு நான்காண்டுகளில் 18,29,875 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2 கோடியே 37 லட்சத்து 88 ஆயிரத்து 375 சுய உதவிக் குழு பெண்களுக்கு 1,12,998.03 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்து, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருவதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.