குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்..!
சிறுமி பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி குறித்த விவரங்களை வழங்கினால் வெகுமதி வழங்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி, முன்கூட்டியே பள்ளி முடிந்ததால், அருகில் ஆரம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்வண்டி நிலையத்தைக் கடந்து ஆள்நடமாட்டம் இல்லாத மாந்தோப்பு வழியாக சென்ற போது பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் சிறுமியை கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமியின் உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில், 10 நாட்களாகியும் இன்று வரை, குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டு அறிக்கையில், " குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவரின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். குற்றவாளி குறித்து தகவல் அறிந்தால் 99520 60948 என்ற பிரத்யேக மொபைல் எணணில் அழைக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.