கேமராவை பறித்து பிரபல யூடியூபரை மிரட்டிய ரௌடிகள்..! அலேக்கா தூக்கிய போலீஸ்..!
தொழில்நுட்பத்தை வேடிக்கையாகவும் எளிமையாகவும் கற்றுக் கொடுக்கும் யூட்டியூப் சேனல்தான் A2D சேனல். நந்தகுமார் என்பவர் இந்த சேனலில் டெக்னாலஜி தகவல்களை வழங்கி வருகிறார்.
சென்னையில் தொழில்நுட்ப சாதனங்கள், கேட்ஜெட்கள் விற்கப்படும் இடமான ரிட்ச்சீ ஸ்ட்ரீட்டுக்கு தனது நண்பருடன் வீடியோ Vlog பதிவு செய்யச் சென்றுள்ளார் A2D சேனல் நந்தா. அப்போது, அங்கு போதையில் இருந்த ரௌடிகளால் மிரட்டப்பட்டுள்ளார். Vlog-ல் அவர்கள் பேசிக்கொண்டே சென்றபோது வந்த நபர் ஒருவர், அவர்களை மறித்து, என் கூட வாங்க.. நான் யார் தெரியுமா.. நிஜமான ரௌடி.. ம்ம்ன்னு சொன்னா வந்துருவானுங்க இப்போ.. என மிரட்டும் வகையில் பேசியுள்ளார். அப்போது அந்த நபர் போதையில் இருந்துள்ளார்.
அவர்களை ஒரு ஆட்டோவுக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளார் அந்த நபர். அங்கு ஆட்டோவில் வைத்து சிலர் மது அருந்தியவாறு உள்ளனர். அவர்கள் கேமராவை பறித்துக்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் கையில் ஆயுதங்களையும் வைத்திருந்துள்ளனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பேசி, இவர்களிடம் கேமராவை திருப்பி வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் பட்டப்பகலில், பரபரப்பான தெருவில் மது அருந்திவிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் இந்த காட்சியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது. சென்னையில் மிகவும் பரபரப்பான ரிட்ச்சீ ஸ்ட்ரீட்டில் பட்டப்பகலில் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களை இப்படி மிரட்டும் தைரியம் எப்படி வருகிறது என பலரும் கொந்தளித்துள்ளனர்.
மேலும் பிரபல யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி இந்த வீடியோவை ட்விட்டரில் சென்னை காவல் துறையை டேக்ஸ் செய்து வெளியிட்டார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை உறுதியளித்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.