கல்லூரி மாணவரின் உயிரிழப்புக்குக் ஓட்டுநர், நடத்துநரின் அலட்சியமே காரணம் - உறவினர்கள் சாலை மறியல்..!!

அரியலூர் மாவட்டம் தேவமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற மாணவர், கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். வழக்கம்போல் கல்லூரி முடிந்து ஜெயங்கொண்டம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால் மாணவர் படியில் தொங்கியவாறு சென்றுள்ளார். பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த பேருந்து வாகன நெரிசல் காரணமாக வழக்கமான சாலையில் செல்லாமல் எதிர்திசையில் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது சாலை நடுவே டிவைடரில் உள்ள மின்கம்பத்தில் பாதி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பழைய விளம்பரப் பலகையில் சதீஷ்குமார் முதுகில் மாட்டியிருந்த பேக் சிக்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவர், தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாணவரின் உயிரிழப்புக்குக் ஓட்டுநர், நடத்துநரின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.