தேமுதிகவில் வெடித்த கலகம்! உங்க பையன், தம்பிக்கு மட்டும் பதவியா?

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடந்த 30 ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எழும்பூர் முன்னாள் எம்எல்ஏ நல்லத்தம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தான் கட்சியில் இருந்து விலகுவதாக பிரேமலதா விஜயகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கழகத்தின் உண்மை விசுவாசி ஆகிய நான் கழகத் தலைவர் அன்புத் தலைவர் கேப்டனால் உருவாக்கப்பட்டவன் என்றும் நான் என்றென்றும் அன்புத் தலைவர் கேப்டன் அவர்களுக்காக, கேப்டன் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் என்றும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன் என்பதை தெரிவித்துள்ளார்.
விஜய பிரபாகரன் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும் என்றும் நான் மக்கள் மன்றத்திலும் கழகத்திலும் என்னால் முடித்தவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான முறையில் தங்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இயக்கத்திற்காகவும் கேப்டனின் குடும்பத்திற்காகவும் என்னால் முடிந்த வரை செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தருமபுரியில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த கேப்டன் அவர்களின் மறு உருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற அன்புத்தம்பி இளைய கேப்டன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு கழக இளைஞரணி செயலாளராக அறிவித்ததற்கு வாழ்த்து என்றும் தம்பியின் குரல், தமிழக சட்டப் பேரவையில் கழகத் தலைவர் கேப்டனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
கழக பொதுச் செயலாளர் அண்ணியார், கடந்த 30.04.2025 அன்று வெளியிட்ட கழக அறிவிப்பில் எனக்கு கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் அப்படி விடுவிக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நான் எந்தவித மன வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடுதான் கூறுவதாகவும் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷுக்கு தேமுதிக மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு அனகை முருகேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக, பாமக, மதிமுகவை தொடர்ந்து தற்போது தேமுதிக கட்சிக்குள்ளும் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தேமுதிகவை கழட்டி விட்டுள்ளது. இந்நிலையில் கட்சி நிர்வாகிகளும் விலகுவதாக அறிவித்திருப்பது பிரேமலதாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.