“புயலே வந்தாலும் எதிர்கொள்ள தயார்” : முதலமைச்சர் உறுதி!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்பட வேண்டியவை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்து வருவதால் உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய முதல்வர், புயல் வீசும்போது மரங்கள் கீழே விழுந்தால் அவற்றை அகற்ற உபகரணங்கள் தயாராக உள்ளன என்றும், புயல் காலத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல மீட்புப்படையினர் தயாராக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறிய முதலமைச்சர், தேசிய, மாநில பேரிடர் மீட்டுக்குழு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
newstm.in