1. Home
  2. தமிழ்நாடு

இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சில்லறை பிரச்சினை இருக்காது.. வருகிறது யூபிஐ வசதி!

1

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது மக்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினை சில்லறை பிரச்சினை. உதாரணமாக, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கியதற்கு பில் 91 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு 100 ரூபாயைக் கொடுத்தால் அவர்களிடம் பல நேரங்களில் 9 ரூபாய் சில்லறை இருக்காது. அதேபோல, பலர் 91 ரூபாய் பில்லுக்கு 200 ரூபாய் நோட்டையும், 500 ரூபாய் நோட்டையும் கொடுப்பார்கள். இது ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

இந்தியா முழுவதும் இப்போது யூபிஐ வசதி வந்துவிட்டது. 10 ரூபாய்க்கு டீ குடித்தாலும் அதற்கு யூபிஐ மூலம் பணம் அனுப்ப முடிகிறது. பல்வேறு இடங்களில் யூபிஐ வசதி வந்துள்ளதால் பொதுமக்களின் பல்வேறு சிரமங்கள் குறைந்துள்ளன. பேருந்துகளில் கூட டிக்கெட் எடுப்பதற்கு யூபிஐ வசதி வந்துவிட்டது. கோவில்களில் டொனேஷன் கொடுப்பது போன்ற பல விஷயங்களுக்கு யூபிஐ வசதி பெரும் உதவியாக இருக்கிறது. ரேஷன் கடைகளிலும் யூபிஐ வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் நினைத்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள பல ரேஷன் கடைகளில் யூபிஐ வசதி ஏற்கெனவே வந்துவிட்டது. ஆனால் அனைத்து கடைகளிலும் இன்னும் வரவில்லை. 37 மாவட்டங்களில் மொத்தம் 10,661 ரேஷன் கடைகளில் மட்டுமே தற்போது யூபிஐ வசதி இருக்கிறது. ஆனால் அந்த கடைகளிலும் முழுமையாக யூபிஐ வசதி பயன்படுத்தப்படவில்லை. அதை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் உரிமை மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

இதுபோன்ற சூழலில், ரேஷன் கடைகளில் யூபிஐ வசதி குறித்த முக்கியமான ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்னும் ஒரு ஆண்டுக்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யூபிஐ வசதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 37,328 ரேஷன் கடைகளிலும் படிப்படியாக யூபிஐ வசதி கொண்டுவரப்படும். பிஓஎஸ் இயந்திரத்தில் QR கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது மட்டுமல்லாமல், ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதியும் வரவிருக்கிறது.

ரேஷன் கடைகளில் தற்போது நாம் வாங்கும் பொருட்களுக்கான பில் மற்றும் விவரங்களை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதையே பயன்படுத்துகின்றனர். அதற்கான தொகையையும் அவர்களே கணக்கிட்டு அந்த காகிதத்தில் எழுதிக் கொள்கிறார்கள். சில இடங்களில் அதிக பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற சூழலில், பிஓஎஸ் இந்திரத்துடன் இணைக்கப்பட்ட பில்லிங் மெஷின் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. அதில் தானியங்கி முறையில் பொருட்களின் விவரம் மற்றும் அதற்கான தொகை குறிப்பிடப்பட்டு வழங்கப்படும்.

அனைத்து ரேஷன் கடைகளிலும் யூபிஐ வசதி அமலுக்கு வருவது ரேஷன் அட்டைதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஸ்மார்ட்போன் மூலமாக மிக எளிதாகப் பணம் செலுத்த முடியும். சில்லறை பிரச்சினை இருக்காது. ரேஷன் கடை ஊழியர்களிடமும் எந்த வாக்குவாதமும் செய்ய வேண்டிய பிரச்சினை இருக்காது. சில நேரங்களில் சில்லறை இல்லை என்பதற்காக சில இடங்களில் ரேஷன் பொருட்களைத் தராமல் சில்லறை கொண்டுவாருங்கள் என்று திருப்பி அனுப்புவதாகவும் புகார்கள் உள்ளன. இனி அதுபோன்ற சிரமங்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இருக்காது.

Trending News

Latest News

You May Like