1. Home
  2. தமிழ்நாடு

தவறான விளம்பரத்தை வெளியிட்டதற்காக ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்..!

1

ரேபிடோ டாக்ஸி நிறுவனம் ஒரு புதிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றொரு நடவடிக்கையாக தவறாக வழிநடத்தக்கூடிய விளம்பரத்தை வெளியிட்டதற்காகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொண்டதற்காகவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

“ஐந்து நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ. 50 பெறலாம்” என்ற சலுகை கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் நுகர்வோருக்கு உறுதியளிக்கப்பட்ட ரூ. 50 கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. அத்தொகை மேலும் தாமதம் அல்லது நிபந்தனையின்றி முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது."5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ. 50 பெறலாம்" மற்றும் "ஆட்டோ உத்தரவாதம்" என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்த ரேபிடோவின் தவறான விளம்பரங்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கவனத்தில் கொண்டது.

இது தொடர்பான விரிவான விசாரணைக்குப் பிறகு இந்த விளம்பரங்கள் தவறானவை என்றும், தவறாக வழிநடத்தக் கூடியது மற்றும் நுகர்வோருக்கு நியாயமற்ற செயல் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்துள்ளது. இதுபோன்ற தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் 2024ஆம் ஆண்டின் மே மாதம் வரை ரேபிடோ நிறுவனத்திற்கு எதிராக 575 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2025 ஜூன் மாதம் முதல் 2025 ஜூலை வரை 1224 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நுகர்வோர் தங்களுக்கான உதவிக்கு தேசிய நுகர்வோர் உதவி எண் 1915-ஐ அழைக்கலாம். இது தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய என்சிஎச் செயலி அல்லது இணைய தளத்தை பயன்படுத்தலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் டிஜிட்டல் விளம்பரங்களில் உள்ள நுணுக்கங்களை கவனமாகப் படிக்க வேண்டும் என்றும் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டால் அந்த சலுகைகளை ஏற்கும் முன் அனைத்து விதிமுறைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். பரிவர்த்தனைகள் மற்றும் தகவல்தொடர்புகளின் பதிவுகளை வைத்திருக்க வேண்டும்.

நம்பிக்கையை வளர்ப்பதற்கு நேர்மையான, தெளிவான விளம்பரங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நிறுவனங்களுக்கும் அரசு தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க முடியும். பொதுமக்களும் ஏமாறாமல் இருப்பார்கள்.

Trending News

Latest News

You May Like