ராமேஸ்வரம் மீனவர்கள் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை 6 விசைப்படகையும், 43 மீனவர்களையும் கைது செய்தது.
இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 8 விசைப்படகையும் 55 மீனவர்களையும் விடுதலை செய்ய கோரி நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 2ஆவது நாளாக ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து 8 விசைப்படகுகளையும் 55 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in