மீண்டும் பரபரப்பை கிளப்பிய ராமதாஸ் : தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக புகார்..!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
டாக்டர் ராமதாஸ் கூறிய இந்த குற்றச்சாட்டு கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கருவியை டாக்டர் ராமதாஸ் வீட்டில் யார் வைத்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார்.
அதன் பேரில் கடந்த 17-ந்தேதி 8 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் டாக்டர் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதனிடையே தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஒட்டு கேட்கும் கருவி ஆய்வுக்காக கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.. wi-fi மூலம் சட்ட விரோதமாக ராமதாஸ் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் தலைமையில் கோட்டகுப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்து வரும் நிலையில், ஒட்டு கேட்கும் கருவி மற்றும் தொலைபேசி ஹேக் உள்ளிட்ட விவகாரம் அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது.
.png)