1. Home
  2. தமிழ்நாடு

அன்புமணிக்கு வரும் 31ம் தேதி வரை கெடு - ராமதாஸ்..!

1

ராமதாஸ் தலைமையில் கடந்த 17ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்வைத்தது. இதன் தொடர்ச்சியாக தைலாபுரத்தில் இன்றைய தினம் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி ஆலோசனை நடத்தியது. அதில் குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாமக அமைப்பு செயலாளர் அவர்கள் செயல் தலைவர் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி வைப்பார் என்று எம்.எல்.ஏ அருள் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்க வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் ஏதேனும் இருப்பின் 31.08.2025க்குள் நேரிலோ, கடிதத்தின் வாயிலாகவோ சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாமகவில் விரிசல் மேலும் பெரிதாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

 

அடுத்தகட்டமாக அன்புமணி மீது ராமதாஸ் என்ன நடவடிக்கை எடுப்பார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்படும் சூழல் உருவாகும். இது வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாமகவிற்கு பெரும் பின்னடைவாக அமையும். வாக்கு வங்கி பிளவுபடும்.

அதுமட்டுமின்றி கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் வேறு கட்சிக்குள் தாவி செல்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதற்குள் உட்கட்சி பூசலை சரிசெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பாமக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் தற்போதைய நிலைமையை பார்த்தால் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது போல தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அன்புமணி மீது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்வைத்துள்ள 16 குற்றச்சாட்டுகள்

  1. பொதுக்குழுவில் மைக்கை தூக்கி போட்டு ராமதாஸ்க்கு எதிராக பேசியது; பனையூரில் புதிய அலுவலகத்திற்கு வருமாறு கூறியது
  2. தைலாபுரத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு 100 செயலாளர்களை வரவிடாமல் தடுத்தது
  3. தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் ராமதாஸ் அவர்களின் இருக்கைக்கு கீழ் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது
  4. அனுமதி பெறாமல் பொதுக்குழுவை நடத்தி அதில் ராமதாஸ்க்கு தனி இருக்கை வைத்து துண்டு அணிவித்தது
  5. அனுமதியை மீறி உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற நடைபயணம் மேற்கொண்டது
  6. சமூக வலைதளங்களில் ராமதாஸ் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டது
  7. ஆளுமைமிக்கவர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை உதாசீனப்படுத்தியது
  8. புகைப்படம், பெயர் விஷயத்தில் ராமதாஸ் வலியுறுத்திய பின்பும், கூட்டங்களில் வரம்பு மீறுவது
  9. ராமதாஸிற்கு நல்ல புத்தி கொடு என பிரார்த்தனை செய்தது
  10. பசுமைத் தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றியது
  11. ராமதாஸிடம் எதுவும் பேசாமல் 40 முறை பேசியதாக பொதுவெளியில் கூறியது
  12. பாமக தலைமை அலுவலகத்தை மாற்றியது
  13. ராமதாஸ் நீக்கிய நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்தது
  14. ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் இருந்த போது, கூட்டு பிரார்த்தனை செய்வதாக கூறியது
  15. ராமதாஸை சந்திக்க வருவோரிடம் பணமும், பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறியது
  16. மக்கள் தொலைக்காட்சியை அபகரித்தது

Trending News

Latest News

You May Like