மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்கும் முன் 21 முறை 'ஓம் ஸ்ரீ ராம்' எழுதிய ராம் மோகன் நாயுடு..!
கடந்த 9 தேதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றது. மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அவரோடு 71 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய பிரமாணம் செய்து கொண்டனர்.
மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்பியான கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு அமைச்சராக பதவி ஏற்றார். மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இளம் வயது அமைச்சராக அறியப்படுகிறார் ராம் மோகன் நாயுடு. அவருக்கு சிவில் விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ராம் மோகன் நாயுடு, கொரோனா காலத்திற்கு பிறகு விமான டிக்கெட்டுகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிப்பதாகவும், அதுகுறித்து அறிய ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். சாமானியர்களுக்கு சவாலாக உள்ள டிக்கெட்டின் விலை குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விமான பயணத்தை சாமானியர்களிடம் கொண்டு சேர்ப்பதே தங்களின் நேக்கம் என்ற ராம் மோகன் நாயுடு, பிரதமர் மோடி தன்னிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக ராம் மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு ஒரு பக்கத்தில் 21 முறை 'ஓம் ஸ்ரீ ராம்' என்று எழுதினார். ஓம் ஸ்ரீ ராம் என்று எழுதும்படி தனது தாயார் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மோடி 3.0 அமைச்சரவையில் ராம் மோகன் நாயுடுதான் இளம் அமைச்சர் ஆவார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் கே யர்ரான் நாயுடுவின் மகன் ஆவார். பர்டூ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்ற ராம் மோகன் நாயுடு, லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த பிறகு, சிங்கப்பூரில் பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார்.