ராஜ்கோட் விளையாட்டு அரங்கில் பயங்கர தீ விபத்து : பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c981417489493b8df74785d955bf405d.png?width=836&height=470&resizemode=4)
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி கேளிக்கை அரங்கு உள்ளது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியே புகை மண்டலம் ஆனது. இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். தற்போது மீட்புப் பணி நடந்து வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளான சிறுவர், சிறுமியர் வந்துள்ளதால், அவர்களில் பலர் இதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு, 7 மணியளவில் பலர் அந்த விளையாட்டு மையத்தில் இருந்த போது, திடீரென ஒரு இடத்தில் தீப்பிடித்தது. பின்னர் இந்த தீ, மளமளவென விளையாட்டு மையம் முழுவதும் வேகமாக பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் தப்பிக்க வழியில்லாமல் அந்த இடத்திற்குள்ளேயே சுற்றி சுற்றி ஓடி வந்தனர். ஏராளமான சிறுவர்களும், குழந்தைகளும், பெண்களும் அதில் இருந்தனர்.மையத்தில் எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டு உபகரணங்களும், ஏசி உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்களும் இருந்ததால் அவற்றில் தீப்பற்றி பயங்கரமாக எரிந்தது.
விளையாட்டு மைய நிர்வாகம் உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தது. இதன்பேரில் அங்கு 20-க்கும் மேற்பட்ட வண்டிகளுடன் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முயன்றனர்.
இந்நிலையில், விளையாட்டு மையத்தில் ஒரு பகுதியில் பற்றிய தீயை போலீஸார் அரை மணிநேரத்திற்கு முன்பாக அணைத்தனர். அப்போது தீயில் கருகி இருந்த 20 பேரை தீயணைப்பு வீரர்கள் சடலங்களாக மீட்டனர். ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது
இது குறித்து ராஜ்கோட் நகராட்சி ஆணையர் ஆனந்த் படேல் கூறுகையில், “மீட்புப் பணி முடிந்த பின்னரே முழு விவரம் தெரியவரும்” என்றார். மீட்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக முதல்வர் பூபேந்திர படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், “ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.