ஆளுநர் மாளிகை பரபர விளக்கம் : வேந்தராக ஆளுநர் ஆர்.என்.ரவியே நீடிக்கிறார்..!

திமுக அரசு கடந்த ஆண்டு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் அண்மையில் ஆளுநர் செயல் சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்துடன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவர்களுக்கு காலக் கெடுவும் முதல்முறையாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக் கதைகளையோ தவறியும் மாணவர்களிடையே பரப்பிவிடக் கூடாது என்று முதல்வர் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உதகையில் வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும். பல்கலைக் கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, துணை வேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது, கடந்த மூன்று ஆண்டுகளாக உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறோம் என்றும் ஆளுநர் மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்காக துணை வேந்தர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதே சமயம் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், ஆளுநரின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து உயர் கல்வித் துறை சார்பில் பதிலடி தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.