வயநாடு பகுதி மக்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும் - ராகுல் காந்தி..!
கேரளாவில் மலைப் பிரதேசங்கள் நிறைந்த வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 30-ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 291 ஆக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிப்பு நிறைந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் நின்று வெற்றிபெற்றவருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் நேற்று (ஆகஸ்ட் 1) வயநாடு வந்தார்.
நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூரல்மாலா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், அங்கு நிலைமையை ஆய்வு செய்தனர். ரெயின் கோட் அணிந்தபடி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தின் வழியாக சென்ற அவர்கள், அங்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். மேப்படி என்ற இடத்தில் நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ள செயின்ட் ஜோசப் பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது ராகுல் கூறியதாவது: வயநாடு நிலச்சரிவு மிகப்பெரிய பேரிடர். பெரும் துயரத்தை அளித்து உள்ளது. அப்பகுதி மக்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும். அனைத்து உதவிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி கிடைப்பது அவசியம். ஏராளமானோர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தவிப்பது வேதனை அளிக்கிறது.
மீட்பு பணியில் அயராது ஈடுபடுவோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வயநாடு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. அரசியல் குறித்து பேச உகந்த இடம் இது அல்ல. எனது தந்தையை இழந்த போது ஏற்பட்ட துயரத்தை, நிலச்சரிவால் பெற்றோரை இழந்துள்ளவர்களிடம் உணர்கிறேன். இவ்வாறு ராகுல் கூறினார்.
பிறகு பிரியங்கா கூறியதாவது: ஒட்டு மொத்த நாடும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும். உதவுபவர்களை பார்க்கும் போது உருக்கமாக உணர்கிறோம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்யப்படும். ஒவ்வொருவரும் குடும்பத்தை காப்பற்ற முயன்று தோற்று உயிரிழந்த துயரத்தை உணர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வருகையை ஒட்டி அங்கு காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் கூடி இருந்தனர். காவல் துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
.png)