புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா..!
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது அமைச்சர் பதவி ராஜினாமா குறித்து தனது தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ள சந்திர பிரியங்கா, “சொந்த பிரச்சனைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துவது நாகரீகம் அல்ல. தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்.சட்டமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக என் பணியை மனத் திருப்தியுடன் ஓயாமல் செய்து வருகிறேன்.
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். எனக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா, நெடுங்காடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். குறிப்பாக, புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் இருக்கும் ஒரே பெண் உறுப்பினர் என்ற பெருமையும், ஒரே பெண் அமைச்சர் பெருமையும் பெற்றுள்ளார்.