1. Home
  2. தமிழ்நாடு

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

1

புதுச்சேரி அரசில் இரண்டு முறை அமைச்சராகவும், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்தவர் கண்ணன். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் புதுச்சேரி பிரிவுத் தலைவராக இருந்தார்.

இதனையடுத்து, அங்கிருந்தும் வெளியேறி தனியாக இரண்டு கட்சிகளையும் நடத்தினார். கடந்த 2016- ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து சட்டப்பேரவையில் தேர்தலில் போட்டியிட்ட ப.கண்ணன், தோல்வி அடைந்தார். இறுதியாக பா.ஜ.க.வில் இணைந்து பின்னர் அங்கிருந்தும் விலகினார்.

கடந்த சில நாட்களாக ப.கண்ணன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். மறைந்த ப.கண்ணனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவை தலைவர் கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான திரு. புதுவை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளவயது பணியாற்றிய திரு. கண்ணன் அவர்கள், கட்சி அரசியலுக்கு முதல் அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராகத் திகழ்ந்து வந்தவர் ஆவார். அவரது மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


 


 

Trending News

Latest News

You May Like