என்.எல்.சி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதியில்லை: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது பாசன நிலம் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட பலர் என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இதை எதிர்த்து என்எல்சி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பு சட்டத்தை கையில் எடுத்து அனுமதிக்கப்படாத இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும், போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கண்டறியும்படி கடலூர் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுப்போம் எனவும் உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. காவல்துறை குறிப்பிடும் இடங்களில் அமைதியாக போராட்டம் நடத்திக் கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.