தனியார் பள்ளி கல்விக் கட்டணம் !! 3 தவணைகளில் செலுத்தலாம் !! தமிழக அரசு
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தனியார் பள்ளிகள், ஆன்லைன் வழியாக கல்வியை கற்பித்து வருகின்றன. இதற்காக, வழக்கமான பள்ளிக் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போதைய சூழலுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டண முறையை நிர்ணயம் செய்ய குழு அமைக்கலாமே என தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்தது.
இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசும் , கல்விக் கட்டணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவு செய்யும் என தெரிவித்தது. மேலும், தற்போதைய சூழலில் 3 தவணைகளாக 75 சதவீதம் கல்விக் கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஊரடங்கு காலத்தில் 25 சதவீதமும், பள்ளிகள் திறப்பிற்கு பிறகு 25 சதவீதமும், பள்ளிகள் திறந்து 3 மாத செயல்பாடுகளுக்கு பிறகு மீதம் 25 சதவீதமும் வசூலிக்கலாம். பள்ளிக் கல்வி கட்டணத்தை செலுத்த தாமதமானாலும் , மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Newstm.in