மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c9e208709cebde8a7472dc25f6338b5e.jpg?width=836&height=470&resizemode=4)
கடந்த ஜனவரி 2-ம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்துவைத்தார். அதன் தொடர்ச்சியாக ஜனவரி 19 ஆம் தேதி சென்னையில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர், அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம், ராமநாதபுரம் கோயில்களில் வழிபாடு நடத்தினார்.
பின்னர், பிப்ரவரி 27-ம் தேதி 2 நாள் பயணமாக மீண்டும் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பல்லடத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்திலும், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்துகொண்டார். அதற்கு அடுத்த வாரமே மார்ச் 4 ஆம் தேதி 4 ஆவது முறையாக சென்னை வந்த பிரதமர் மோடி, கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை மின்உற்பத்தி திட்டத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், 5ஆவது முறையாக வருகின்ற 22 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக பாஜக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து பிரதமர் மோடி, தமிழ்நாடு வருகையால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் விரைவில் பாஜக கூட்டணி இறுதியாகும் எனவும் கூறப்படுகிறது.