ஒரே நாளில் 2500 பேருக்குப் பொது மன்னிப்பு வழங்கிய அதிபர் பைடன்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் வரும் திங்கள்கிழமை [ஜனவரி 20] பதவியேற்க உள்ளார்.
எனவே தற்போதைய அதிபர் ஜோ பைடன் [82 வயது] தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும்.
இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் நேற்று [வெள்ளிக்கிழமை] ஒரே நாளில் 2500 பேருக்குப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
வன்முறையற்ற சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்குத் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை பேருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை.
வன்முறையில் ஈடுபடாதபோதிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதாகப் பைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.
அவர்கள் செய்த கொலை கண்டிக்கத்தக்கதாக இருப்பினும் மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாகப் பைடன் கூறினாா்.
கடந்த 2003 முதல் மத்திய நீதிமன்றதனால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் 2016ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மீண்டும் அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
வரும் ஜனவரி 20 முதல் டொனால்டு டிரம்ப் அதிபராக உள்ளார் என்பதால் அவரிடமிருந்து மரண தண்டனை கைதிகளைப் பாதுகாக்க ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாா்.