பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/aa4bc6a05e4732972189556855d7f634.png?width=836&height=470&resizemode=4)
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியோடு முடிவடைந்து கடந்த 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றான விருதுநகர் தொகுதியில் நடிகர் விஜயகாந்தின் மகன் ஆன விஜய பிரபாகரன் போட்டியிட்டார்.
இதே தொகுதியில் விஜய பிரபாகரன் தேமுதிகவின் சார்பாகவும், நடிகை ராதிகா சரத்குமார் பாஜகவின் சார்பாகவும் போட்டியிடுகிறார்கள். அதோடு திமுகவில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பாக இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூரும் போட்டியிட்டார். விஜயகாந்தின் சொந்த தொகுதியான விருதுநகரில் அவருடைய மறைவிற்குப் பிறகு விஜயகாந்த் மகன் போட்டியிட்டு இருப்பதால் அவர் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகமாக இருந்தது.
கடந்த 4ம் தேதி காலை வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வந்தார். ஆனால் நண்பகலுக்குப் பிறகு வாக்குகளில் வித்தியாசம் ஏற்பட்டது.
பின்னர் இறுதியில் 3,80,877 வாக்குகள் பெற்ற விஜயபிரபாகரன் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெற்றார்.
இந்நிலையில், சென்னையில் தேமுதிக கட்சி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்றபோது விஜயபிரபாகரன் 4,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். தோல்வியை முழு மனதாக ஏற்கிறோம்; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோய். மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என பிரேமலதா கூறியுள்ளார்.