1. Home
  2. தமிழ்நாடு

இன்று அம்மனை இப்படி வழிபடுங்க...வேண்டியது கிடைக்கும்..!

1

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அனைத்து விதமான செல்வ நலன்களையும் அள்ளித் தரக் கூடி நாள் வெள்ளிக்கிழமையாகும். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட்டால் வீட்டில் தெய்வீக அருள் நிறையும், நன்மைகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை, சுக்கிர பகவானுக்கும் உரிய நாள் என்பதால் இந்த நாளில் சுக்கிர ஹோரையில் செய்யப்படும் பரிகாரங்களும் அதிக பலன் தரக் கூடியவை. மற்ற மாதங்களில் வரக் கூடிய வெள்ளிக்கிழமையை விட ஆடி மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையிலும் அம்பிகையை எப்படி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த நாளில் அம்பிகையை வீட்டிற்கு அழைத்து, விளக்கு பூஜை செய்து வழிபடுவது சிறப்பு. பெரும்பாலும் விளக்கு பூஜை என்றால் கோவில்களில் தான் நடத்துவார்கள். ஆனால் இதை வீடுகளிலும் எளிமையாக செய்து அம்பிகையின் அருளை பெறலாம். வீட்டில் உள்ள பெண்கள் சேர்ந்தும், தனியாகவும் விளக்கு பூஜை செய்து வழிபடலாம். விளக்கு பூஜை, குத்துவிளக்கை பயன்படுத்தி செய்வது மிகவும் சிறப்பானது. காரணம், குத்து விளக்கில் முப்பெரும் தேவர்களும், முப்பெரும் தேவியரும் வாசம் செய்வதாக ஐதீகம். அதாவது, குத்து விளக்கின் மேல் பாகமாக எண்ணெய் ஊற்றி, திரியிடும் பகுதியில் சிவ பெருமானும், நடுவில் உள்ள தண்டுப் பகுதியில் மகா விஷ்ணுவும், அடியிலும் உள்ள பிரம்ம தேவரும் தங்களின் தேவியர்களுடன் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் குத்து விளக்கை பயன்படுத்தி, விளக்கு பூஜை செய்வதால் முப்பெரும் தேவர்கள் மற்றும் முப்பெரும் தேவியர்களின் அருளும் நமக்கு கிடைக்கும்.

மாலை 6 மணிக்கு பிறகு விளக்கு பூஜை செய்வது சிறப்பு. வீட்டின் பூஜை அறையிலோ அல்லது ஹாலிலோ கூட வைத்து இந்த பூஜையை செய்யலாம். இதற்கு ஒரு மனைப்பலனையில் கோலமிட்டு, அதன் மீது வாழை இலை விரித்து, அதற்கு மேல் குத்துவிளக்கு வைக்கும் அளவிற்கு பச்சரிசி அல்லது நெல் பரப்பிக் கொள்ள வேண்டும். அதன் மீது குத்து விளக்கு வைத்து, குங்குமம் தொட்டு வைத்து, பூ சுற்றி வைக்க வேண்டும். முதலில் மஞ்சளில் விநாயகர் பிடித்து வைத்து, அதற்கு குங்குமம், அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். விநாயகருக்கு முடிந்த நைவேத்தியம் படைத்து, நாம் செய்யும் இந்த விளக்கு பூஜையின் பலன் முழுமையாக கிடைக்க வேண்டும் என விநாயகரை வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு குலதெய்வத்தையும், நவகிரகங்களையும் வணங்க வேண்டும். அதற்கு பிறகு தான் குத்து விளக்கை ஏற்ற வேண்டும்.

​குத்துவிளக்கு ஏற்றும் போதும் அதற்கான மந்திரத்தை சொல்லி ஏற்ற வேண்டும். குத்துவிளக்கிற்கு குங்குமம், அக்ஷதை அரிசி, பூ ஆகியவற்றை கொண்டு அர்ச்சனை செய்யலாம். அதற்கு குத்து விளக்கிற்கு முன்பாக ஒரு வெற்றிலை வைத்து, அதில் அர்ச்சனை செய்யும் குங்குமங்களை வைக்க வேண்டும். குங்குமம் எடுக்கும் போது எப்போதும் ரிஷப முத்திரையில், அதாவது மோதிர விரல், நடுவிரல் மற்றும் கட்டை விரல் ஆகியவற்றை சேர்த்து வைத்து, மற்ற இரண்டு விரல்களும் நேராக இருக்கும் படி வைத்துக் கொண்டு குங்குமத்தை எடுத்து முதலில் குத்துவிளக்கின் மேல் பகுதியில் உள்ள பார்வதி தேவிக்கும், பிறகு நடுப்பகுதியில் இருக்கும் மகாலட்சுமிக்கும், கடைசியாக அடிப்பகுதியில் இருக்கும் சரஸ்வதிக்கும் காட்டி விட்டு, பிறகு தான் குங்குமத்தை வெற்றிலையில் வைக்க வேண்டும். விளக்கு பூஜை செய்வதற்கான ஒவ்வொரு போற்றி மந்திரங்களை சொல்லி, இந்த முறையில் குங்குமத்தை எடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

குங்குமத்தால் அர்ச்சனை செய்த பிறகு அக்ஷதை, பூக்கள் கொண்டும் இதே போல் அர்ச்சனை செய்யலாம். முடியாதவர்கள் ஏதாவது ஒரு அர்ச்சனை மட்டும் செய்யலாம். அம்பிகைக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம், வளையல் ஆகிய மங்கல பொருட்களை படைத்து, ஏதாவது இனிப்பு அல்லது பழங்கள் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். கற்பூர ஆரத்தி, தீப தூப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். அம்பிகைக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து வைத்து, அதை தினமும் நெற்றியில் வைத்து வருவதால் அம்பிகையின் அருள் எப்போதும் கிடைக்கும். ஆடி முதல் நாள் வழிபட முடியாதவர்கள் கூட ஆடி வெள்ளியன்று இப்படி வழிபட்டு, அம்பிகையை வீட்டிற்கு அழைக்கலாம்.

பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

விளக்கு பூஜை செய்யும் போது பெண்கள் தலையை பின்னல் போட்டு, பூ வைத்து, இரண்டு கைகளிலும் வளையல் அணிந்து மங்கல வடிவமாக அமர்ந்து செய்ய வேண்டும். அதே போல் புடவை தலைப்பை கீழே படாதபடி மடியில் வைத்து தான் பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும் போது வெறும் தரையில் அமர்ந்து செய்யாமல், ஏதாவது விரிப்பை விரித்து, அதன் மீது அமர்ந்த தான் பூஜை செய்ய வேண்டும். விளக்கு பூஜை நிறைவடைந்த பிறகு அம்மனுக்கு படைத்த மங்கல பொருட்களை ஏதாவது சுமங்கலிக்கு கொடுத்து, அவர்களை அம்பிகையாக பாவித்து, அவர்களிடம் ஆசி வாங்கலாம். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு மங்கல பொருட்கள் கொடுத்தும், உணவு அளித்தும் உபசரிக்கலாம். இப்படி வழிபடுவதால் அம்மனின் அருளால் நாம் வேண்டியது கிடைக்கும். எப்போதும் வீட்டில் செல்வமும், மங்களமும் நிறைந்து இருக்கும்.

Trending News

Latest News

You May Like