ஆபாச பட கைது விவகாரம் - சிக்கும் சென்னை வாசிகள்..!
குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரின் செல்போனை ஆய்வு செய்ததன் அடிப்படையில் சென்னை வாசிகள் உள்பட 500 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் (42). ஏசி மெக்கானிக்காக பணியாற்றிய வந்த இவர் குழந்தைகள் ஆபாசப் படங்களை பரப்பியதாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்படும் முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபரின் செல்போன் தற்போது காவல்துறையினர் வசம் உள்ளது. இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த இவர் அதன் பிறகு சரியாக வேலைக்கு செல்லாமல் முகநூலில் வெவ்வேறு பெயர்களில் கணக்குகளை தொடக்கி அவற்றில் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார். பேஸ்புக், மெசஞ்சர் மூலம் குழு துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஆபாசப் படங்களை அனுப்பி வைப்பது கிறிஸ்டோபரின் வாடிக்கையாக இருந்துள்ளது. மேலும், வாட்ஸ் அப்பில் குழு ஆரம்பித்து அதிலும் ஆபாசப் படங்களை பகிர்ந்துள்ளார். இந்த குழுக்களில் உள்ள 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த குழுக்களில் உள்ளவர்கள் குழந்தைகள் ஆபாச படங்களை வேறு யாருக்கும் அனுப்பியிருந்தால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கிறிஸ்டோபரின் ஆபாச பட முகநூல் குழுக்களில் சென்னையை சேர்ந்த ஏராளமானோர் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் கைது படலம் தொடரும் எனவும் கூறப்படுகிறது.
newstm.in