பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா. பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். அவர் தற்போது ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரால் பாதிக்கப்பட்ட மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகரைச் சேர்ந்த பெண்ணை கடத்தியதாக எச்.டி.ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்.
தற்போது அவர் ஜாமினில் இருந்து வருகிறார். அதுபோல் இந்த வழக்கில் அவரது மனைவி பவானி ரேவண்ணாவும் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில், பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பிரஜ்வால் ரேவண்ணா ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினார். இந்த மனு மீதான விசாரணை இன்று பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரஜ்வால் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்காத நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஆபாச வீடியோ, பாலியல் தொல்லை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் ஆகிய 4 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.