நேபாள வாக்கெடுப்பில் சுவாரசியம் : 1 வாக்கு வித்தியாசத்தில் பிரசண்டா அரசு வெற்றி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/4b7f2f322dcface3cea80953b01bca0e.jpg?width=836&height=470&resizemode=4)
நேபாள பிரதமராக 18 மாதங்களில் நேற்று 4வது முறையாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை உறுதி செய்திரக்கிறார் பிரசண்டா. நேபாளத்தில் பிரதமர் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அரசில் அங்கம் வகித்து வந்த ஜனதா சமாஜ்வாதி கட்சி (ஜேஎஸ்பி) தனது ஆதரவை கடந்த வாரம் திரும்பப் பெற்றது. மேலும், கூட்டுறவு சங்கங்களின் நிதியில் முறைகேடு செய்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரபி லாமிச்சானே மீது எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தவிடாமல் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் 30 நாள்களில் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி அதில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில், நாடாளுமன்றத்தில் பிரசண்டா அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நேபாள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 158 உறுப்பினர்கள் பங்கேற்றனர். முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த வெளிநடப்பு செய்துவிட்டது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாக்கெடுப்பில் பிரசண்டா வெற்றி பெற்றார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதை உறுதி செய்தார் பிரசண்டா. கடந்த 2022, டிசம்பர் 25-ஆம் தேதி நேபாள பிரதமராக பிரசண்டா பதவியேற்றார். தற்போது வரை அவர் அரசின் மீது நான்கு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.