1. Home
  2. தமிழ்நாடு

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும் ஆனால் முடிவுகள் கடைசியாக அறிவிக்கப்படும்..!

1

இந்தியா முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும்,  2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும்,  கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93),  கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96),  கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49),  கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.  இதையடுத்து,  7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்த நிலையில், சென்னை ரிப்பன் கட்டத்தில் உள்ள அம்மா மாளிகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள மேற்பார்வையாளர்கள்,  உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் செயல்பட வேண்டும் எனவும் எந்தவித தவறுகளும் ஏற்படாமல் வாக்குகளை எண்ண வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு தங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மேசைகளில் அமர்ந்து நிதானமாக செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

இதனையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “திட்டமிட்டபடி தேர்தல் ஆணையரின் அறிவுரையோடு வாக்கு எண்ணிக்கைகான முதற்கட்ட பயிற்சியானது பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.  ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 14 மேசைகளும்,  சோழிங்கநல்லூர் தொகுதிக்கு மட்டும் 30 மேசைகளும் போடப்பட்டு உள்ளன.

அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.  வரும் 3ம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது.  சில நேரங்களில் தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே ஊடங்களில் வெளியிடப்படுகின்றன.  அவற்றை தவிர்க்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றவுள்ள பணியாளர்களுக்கு எளிமையான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்கி வருகிறார்கள்.  வாக்கு எண்ணும் மையங்களில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார். மேலும், “தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். ஆனால் தபால் வாக்குகளின் முடிவுகள் இறுதியில் தான் வெளியிடப்படும்” என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like