குட் நியூஸ்..! அடுத்தாண்டில் போரூர் - பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b4c254dedbd8381c685efad262d51047.webp?width=836&height=470&resizemode=4)
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பயணிகள் பெரும் வரப்பிரசாதமாக இருப்பது மெட்ரோ ரயில்கள்தான். மெட்ரோ ரயில்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் முக்கியமான வழித்தடமாக இருப்பது கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 26 கிலோ மீட்டர் வழித்தடம். இந்த ரூட்டில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது பூந்தமல்லி - போரூர் வரையான பாதையில் கட்டுமான பணிகள் 90 சதவிக்தம் முடிந்துவிட்டது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 100 சதவிகிதம் நிறைவடைந்து மார்ச் - ஏப்ரலில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று மெட்ரோ இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளர். சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் போரூர் - பூந்தமல்லியில் 2025 டிசம்பரில் போக்குவரத்து தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் நெரிசலான பகுதியாக பூந்தமல்லி - போரூர் ரூட் இருப்பதால் மெட்ரோ ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்பது பயணிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தநிலையில்தான் தற்போது 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.