பள்ளி சிறுமிகளிடம் ஆபாச உரையாடல்.. அடுத்தடுத்து சிக்கும் மதபோதகர்கள் !

சென்னை அயனாவரத்தில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ மத போதக அமைப்பில், மத போதகர்களாக கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவ பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் மதம் தொடர்பான போதனைகள் மற்றும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மிஷனின் ஆங்கில மொழிப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்த சாமுவேல் ஜெய்சுந்தர், வேலுார் பகுதியில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், வேலுாரில் அவரிடம் படித்து வந்த 19 வயது இளம்பெண், சாமுவேல் குறித்து தலைமையகத்திற்குப் புகாரளித்துள்ளார். அதில், தனது முகநுால் மெசஞ்சரில் சாமுவேல் ஜெய்சுந்தர் ஆபாசமாக உரையாடியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சாமுவேலிடம் மிஷன் நிர்வாகிகள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோரும் இதேபோல் பள்ளிச் சிறுமியரிடம் ஆபாசமாக உரையாடியது தெரியவந்தது.
இந்த விவகாரம் பூதகரமாக வெடித்தது. எழுத்தாளர் நிவேதிதா லுாயிஸ் மற்றும் ஜோயல் கிப்ட்சன் ஆகியோர் தங்கள் முகநுால் பக்கத்தில், மதபோதகர்களின் ஆபாச உரையாடல்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்டிருந்தனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, ஸ்க்ரிப்ச்சர் மிஷன், உடனடியாக சாமுவேல் ஜெய்சுந்தரை பணியிடை நீக்கம் செய்வதாக அறிக்கை வெளியிட்டது.
மேலும் இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் ஒரு புகாரையும் அந்த மிஷன் அனுப்பியுள்ளது. மிஷன் ரீதியிலான விசாரணை முடிந்தபின், உரிய ஆதாரங்களுடன் போலீசாருடன் விரிவான புகாரளிக்கவும் மிஷன் கமிட்டி தெரிவித்துள்ளது.
newstm.in