திருவாலங்காடு காவல் நிலையத்தில் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜர்!

தனுஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி அந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை இருவரும் முறையாக பதிவும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த திருமணத்தில் அந்தப் பெண்ணின் வீட்டாருக்கு விருப்பம் இல்லாத நிலையில், கூலிப்படை மூலம் தனுசை கடத்துவதற்கு திட்டமிட்டனர். அதன்படி, தனுசை கடத்த முடியாததால், அவரது தம்பியை கடத்திச் சென்றனர். அப்போது, அந்த சிறுவன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது அடுத்து கூலிப்படையினர் அந்த சிறுவனை விடுவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர். இதில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கும், ஏடிஜிபி ஜெயராமுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், ஏடிஜிபியின் அரசு வாகனத்தில் அந்த சிறுவனை கடத்தியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதைத் தொடரந்து, பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்காக போலீசார் அவரின் வீட்டுக்கு சென்றனர். ஆனால், போலீசார் வருவதை அறிந்த பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி விட்டார். இதனிடையே தனக்கு முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாத பட்சத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று அறிவுறுத்தி இருந்தது.
இந்த உத்தரவை அடுத்து, பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் நேற்று (ஜூன் 16) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். பின்னர் போலீசார் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சீருடையில் இருந்த ஏடிஜிபி ஜெயராமை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் இன்று (ஜூன் 17) சஸ்பெண்ட் செய்ப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்எல்ஏமான பூவை ஜெகன் மூர்த்தி இன்று (ஜூன் 17) ஆஜராகி உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.