நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு : மே.13ஆம் தேதி தீர்ப்பு..!

பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு பல பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இது சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் விசாரணையில் பங்கெடுத்தனர்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காக, 9 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் விசாரணையானது நடைபெற்றது. இதில் குற்றம் சாற்றப்பட்ட ஒவ்வொரு நபரிடமும் சுமார் 50 கேள்விகள் வரை கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சாட்சி விசாரணைகள் முடிவடைந்து விட்டது. இதனால் விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் இறுதிக்கட்டமாக அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொள்ளாச்சி காவல் உதவி ஆய்வாளர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வழக்கறிஞர்களிடையே குறுக்கு விசாரணையும் நடைபெற்றது.
சாட்சி விசாரணைகள் முடிவடைந்ததால் விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் மே 13ஆம் தேதி பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.